நடிகராக மட்டுமின்றி துப்பாக்கி சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ஆளில்லா விமான வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொதுச் சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷன் , பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள், குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வருடமும் 07 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதும், அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், இராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, ஸ்ரீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.