இரண்டே வாரங்களில் 10 துப்பாக்கிச் சூடுகள்: அச்சுறுத்தும் பாதாள உலகம்!

146 views

நாடு முழுவதும் அண்மைக் காலமாக அரங்கேறி வரும் நிழல் உலகக் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்ச அலையை ஏற்படுத்தியுள்ளன. பட்டப்பகலில், வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் சர்வ சாதாரணமாமாகத் தோட்டாக்கள் பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறித்து காவல்துறை அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மிகவும் திடுக்கிடும் விடயம் என்னவென்றால், கடந்த ஜூலை 11 ஆம் திகதி முதல் ஜூலை 25 ஆம் திகதி வரையிலான வெறும் இரண்டு வார காலப்பகுதிக்குள் மட்டும் 10 துப்பாக்கிச் சூடுகள் அரங்கேறியுள்ளன. இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்களால் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென இத்தனை வன்முறைகள் வெடிப்பதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்ற காவல்துறையினருக்கு, இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்துள்ளன. பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான பழிவாங்கல் மோதல்கள் காரணமாகவே நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும், குறிப்பிட்ட சில பிரதான மாவட்டங்களே இந்த நிழல் உலக மோதல்களின் முக்கிய களமாக மாறியுள்ளதாகக் காவல்துறை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய இரு மாகாணங்களிலேயே 80 சதவீதத்திற்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, வர்த்தக மற்றும் போதைப்பொருள் விநியோகப் பாதைகளைக் கைப்பற்றுவதற்காகவே இந்த மோதல்கள் மூண்டுள்ளன.

இதில் பிரதான இலக்காக இருப்பது கொழும்பு மாவட்டம். கொழும்பு நகரின் ஜிந்துப்பிட்டி, கிராண்ட்பாஸ், தலங்கம, கொஹுவளை மற்றும் தெஹிவளை போன்ற அடர்ந்த குடியிருப்புகள் கொண்ட பகுதிகளில் பட்டப்பகலிலேயே துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இரு முக்கிய பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டியே கொழும்பில் தோட்டாக்கள் பாய்வதற்குக் பிரதான காரணமாகும்

நிலைமையின் தீவிரத்தைக் உணர்ந்து கொண்ட காவல்துறைத் தலைமையகம், பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள மற்றும் வன்முறைகள் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பகுதிகளைக் கண்டறிந்து உடனடி அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, அப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் (STF) மற்றும் ஆயுதமேந்திய காவல்துறையினர் களமிறக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாதாள உலகக் குழுவினர் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பயன்படுத்தும் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்களை இலக்கு வைத்து ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைகளில் ஈடுபடும் பாதாள உலக உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.