ஈஸ்டர் தாக்குதல் – சுரேஷ் சாலி கைது, 72 மணிநேர விசாரணை!

110 views

269 ​​பேரின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி நேற்று (25ஆம் திகதி) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். இவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேலியகொட மீன் சந்தை அருகே தனது காரில் பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று காலை அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சுரேஷ் சாலி குற்றப்புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 2019 ஏப்ரல் 21 அன்று தாக்குதல் நடந்த காலகட்டத்தில், சுரேஷ் சாலி மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றி வந்தார்.

இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமான செனல் 4 (Channel 4) வெளியிட்ட ஆவணப்படத்தில், இந்தத் தாக்குதலுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு சுரேஷ் சாலியை நியமித்தார். எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டில் சுரேஷ் சாலி அரச புலனாய்வுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த விசாரணை மிகவும் உணர்வுபூர்வமானது (Sensitive) என்பதால் இது குறித்த மேலதிக தகவல்களை தற்போது வெளிப்படுத்த முடியாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.