கடிதத்திற்கு பதிலில்லை: ஜனாதிபதி மீது மகாநாயக்க தேரர் கடும் அதிருப்தி!

54 views

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பாக முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிய கடிதம் தொடர்பில் இதுவரை எந்தவொரு பதிலும் அல்லது அது கிடைத்தமைக்கான அறிவிப்போ கூட கிடைக்கப்பெறாமை கவலையளிப்பதாக மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழு மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த போதே அவர் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.

நாட்டுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் போது ஆட்சியாளர்களுக்கு தர்மத்தின் வழியில் அநுசாசனங்களை வழங்குவது மன்னர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே தொன்றுதொட்டு இடம்பெற்று வரும் வழக்கம் என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், முப்பீட மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டை விளக்கி அனுப்பப்பட்ட கடிதம் தமக்குக் கிடைக்கவேயில்லை என சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் கூறிவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எந்தவொரு துறைக்கும் இதுவரை முறையான நிலையான கொள்கைகள் வகுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய தேரர், ஒரு அரசாங்கம் கொண்டுவரும் கொள்கைகளை அடுத்து வரும் அரசாங்கம் ரத்து செய்வதால் நாடு தொடர்ந்து ஒரே இடத்திலேயே தேங்கி நிற்பதாகக் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியில் இருக்கும் போது பேசிய விடயங்களை ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியாளர்கள் வசதியாக மறந்துவிட்டு, தமக்கு நன்மை பயக்கும் வகையிலேயே முடிவுகளை எடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் நிலவும் சீரற்ற கல்வி முறை குறித்தும் கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்தார். புற்றீசல்கள் போலப் பெருகியுள்ள தனியார் மேலதிக வகுப்புகளால் ஒழுக்கமும் கலாச்சாரமும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்படுவதால் சிறுவர்கள் ஞாயிறு பாலர் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார். நவீன உலகத்திற்கு ஏற்ற கல்வி அவசியமானது என்ற போதிலும், நற்பண்புகளையும் விழுமியங்களையும் இழந்து முன்னேற முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான அஷ்டபரிசுத்தப் பொருட்களின் தரம் குறைந்துள்ளமை மற்றும் விவசாய சமூகத்தின் வாழ்வாதார நெருக்கடிகள் போன்ற உண்மையான பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டு, தேவையற்ற விடயங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மகாநாயக்க தேரர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம, உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் நீதிபதிகளின் சேவைக் காலம் 60 வயதை விடவும் நீடிக்கப்பட்டு வருவதால், தற்போதைய சூழலில் இலங்கையிலும் நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிப்பதில் எவ்வித நடைமுறைச் சிக்கலும் இல்லை எனக் குறிப்பிட்டார்.