சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் வாழ்க்கையில் பல முக்கியமான தருணங்கள் உள்ளன. ஆனால் அவற்றுள் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த கார் விபத்துதான் அதிமுக்கியமானது.
தனது தந்தையிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்று நாட்டை வழிநடத்துவதற்கு பஷார் அல் அசாத்திற்கு ஆரம்பத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் பஸாலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 1994ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸ் அருகே நடந்த ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது பஷார் லண்டனில் கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார்.
பஸாலின் மரணத்தைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராவதற்கு பஷார் தயார்படுத்தப்பட்டார். தற்போது அவர் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த ஒரு மோசமான அதிபராக பார்க்கப்படுகிறார்.
ஆனால், கண் மருத்துவராக இருந்த பஷார் அல் அசாத், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?
பஷார் அல் அசாத் 1965ஆம் ஆண்டு, ஹபீஸ் அல்-அசாத், அனிசா மக்லூஃப் ஆகியோருக்குப் பிறந்தார்.
அவர் பிறந்தபோது, சிரியா, மத்திய கிழக்கு மற்றும் இதர பிராந்தியங்களில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அந்த நேரத்தில், அப்பகுதிகளில் உள்ள அரசியலில் அரபு தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தியது. சிரியாவிலும் அதே நிலைதான்.
பஷார் அல் அசாத்தின் குடும்பம் அலாவைட் எனப்படும் சிரியாவை சேர்ந்த ஒரு பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் ராணுவத்தில் சேர்ந்தனர்.
அப்போது ஹபீஸ் அல் அசாத் ஒரு ராணுவ அதிகாரியாகவும், பாத் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும் பிரபலமடைந்தார். அவர் 1966ஆம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.
தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி 1971ஆம் ஆண்டு ஹபீஸ் அல் அசாத் சிரியாவின் அதிபரானார். 2000ஆம் ஆண்டு, அவர் இறந்துபோகும் வரை அவர் அதிபராகவே பதவி வகித்தார்.
அவரது ஆட்சிக்காலம் சிரியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு உள்ள வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஜனநாயக தேர்தல்களை நிராகரித்து அவர் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தார்.
டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பஷார் அல் அசாத்,1992ஆம் ஆண்டு, லண்டனில் உள்ள வெஸ்டர்ன் ஐ மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற பிரிட்டன் சென்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான A Dangerous Dynasty: The Assads என்ற பிபிசி ஆவணப்படத்தின்படி, லண்டனில் உள்ள வாழ்க்கையை பஷார் மிகவும் விரும்பினார். லண்டனில்தான் பஷார் தனது வருங்கால மனைவி அஸ்மா அல்-அக்ராஸை சந்தித்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது மூத்த சகோதரரான பஸல் உயிரிழந்த பிறகு பஷாருடைய வாழ்க்கையின் போக்கு அடியோடு மாறியது. சிரியாவின் அடுத்த தலைவராக அவரைத் தயார் செய்வதற்காக உடனடியாக லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு, பஷார் ராணுவத்தில் சேர்ந்தார், மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்கினார்.
ஹஃபீஸ் அல்-அசாத் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். அதையடுத்து, 34 வயதான பஷார் சிரியாவின் அதிபராக நியமிக்கப்பட்டார். இதற்காக சிரிய அரசியலமைப்பில் அதிபராவதற்கு குறைந்தபட்ச வயது தேவை 40இல் இருந்து குறைக்கப்பட்டது.
அவர் “வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், வளர்ச்சி, நவீனமயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் அரசு சார்ந்த சிந்தனை” போன்றவை குறித்துப் அதிகமாக பேசினார்.
அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, பஷார் அஸ்மா அல்-அக்ராஸை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹபீஸ், ஜீன் மற்றும் கரீம்.
தொடக்கத்தில், அரசியல் சீர்திருத்தம் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றிய பஷாரின் சொல்லாட்சி பல்வேறு சிரிய மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது தலைமை, மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்றது ஆகியன மாற்றத்துக்கான புதிய சகாப்தத்தைக் உருவாக்கியது.
சிரியாவில் சிறிது காலத்திற்கு சிவில் விவாதம் மற்றும் “டமாஸ்கஸ் ஸ்பிரிங்” எனப்படும் கருத்து சுதந்திரத்தைப் பற்றிய விவாதமும் நடைபெற்றது. ஆனால் 2001ஆம் ஆண்டின்போது, பாதுகாப்புப் படையினர் மீண்டும் தங்களது ஒடுக்குமுறையைத் தொடங்கி, அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களைக் கைது செய்தனர்.
அதிபராகப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை பஷார் அறிமுகப்படுத்திய அதே வேளையில், அவரது உறவினரான ராமி மக்லூப்ஃபின் எழுச்சியும் காணப்பட்டது. மக்லூஃப் ஒரு பரந்த பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவினார், இது செல்வமும், அதிகாரமும் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாக விமர்சகர்கள் கூறினர்.
பஷார் அல் அசாத் ஆட்சியின் முதல் பத்தாண்டு காலத்தில் இரானுடனான சிரியாவின் உறவு வலுப்பெற்றது. மேலும் கத்தார், துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் சிரியா உறவுகளை வளர்க்கத் தொடங்கியது.
ஆரம்பத்தில், பஷாருக்கு ரியாத்தின் ஆதரவு இருந்தபோதிலும், சௌதி அரேபியாவுடனான உறவுகள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தன.
ஒட்டுமொத்தமாக, வெளியுறவுக் கொள்கையில் பஷார் அல்-அசாத் தனது தந்தையின் வழியையே பின்பற்றினார். நேரடி ராணுவ மோதல்களைத் தவிர்த்து கவனமாக உத்திகளைக் கையாண்டார்.
கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அவரது மனைவி அஸ்மா அல்-அசாத் வோக் பத்திரிக்கைக்கு அளித்த ஒரு நேர்காணலில், அவர்களது நாடு “ஜனநாயக முறையில்” வழிநடத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதே நாளில், துனிசியாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான முகமது பௌசிஸி ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததால் தீக்குளித்தார். இது துனிசியா மக்கள் மத்தியில் ஒரு கடும் எதிர்ப்பைத் தூண்டியது, இதனால் அந்நாட்டின் அதிபர் ஜைன் எல் அபிடின் பென் அலியின் ஆட்சி கவிழ்ந்தது.
இந்த எழுச்சியால் எதிர்பாராதவிதமாக எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன், சிரியா போன்ற அரபு உலக நாடுகள் முழுவதும் புரட்சிகர இயக்கங்கள் ஏற்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிரியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை அடுத்து சில நாட்களுக்குப் பிறகு தெற்கு நகரமான தாராவிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. சுவர்களில் அதிபர் அசாத்தை எதிர்த்து வாசகங்களை எழுதியதற்காக குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு, சிரிய மக்களிடம் உரையாற்றுவதற்கு அசாத் இரண்டு வாரங்கள் காத்திருந்தார். நாடாளுமன்றத்தில், சிரியாவை குறிவைத்து நடத்தப்படும் “சதி” திட்டங்களை முறியடிப்பதாக உறுதியளித்தார், மேலும் பல்வேறு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்.
தராவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், ஆர்ப்பாட்டம் அதிகரித்து, சிரியாவின் பல்வேறு நகரங்களில் அசாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன.
சில மாதங்களுக்குள், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
சிரியாவில் மோதல் தீவிரமடைந்ததால், சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு மத்தியிலும், உயிரிழப்புகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து லட்சங்களாக உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, இரான் மற்றும் இரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அசாத்தின் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. மற்றொருபுறம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களை ஆதரித்தன.
தொடக்கத்தில், அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகம் மற்றும் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாலும், விரைவில் அதில் மதம் சார்ந்த கோஷங்களும் எழத் தொடங்கின. மேலும் சன்னி முஸ்லிம்களின் பெரும்பான்மையைவிட அலாவைட் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் சாதகமாக இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
பிராந்திய அளவிலான தலையீடு சமூக பிரிவினைவாதத்தை ஆழமாக்கியது. இஸ்லாமிய பிரிவுகள் அலாவைட் பிரிவுகளுக்கு எதிராக விரோதப் பேச்சுகளைத் தொடுத்தனர். ஹெஸ்பொலா தலைமையில் இயங்கும் இரானுக்கு விசுவாசமான ஷியா போராளிகள் அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக சிரியாவில் குவிந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு, அசாத்தின் அரசாங்கம் சரிவின் விளிம்பில் இருப்பது போலத் தோன்றியது, அது நாட்டின் பல்வேறு பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும், ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டால் நிலைமை தலைகீழாக மாறியது, அசாத் முக்கியப் பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடு பெற முடிந்தது.
அசாத் ஆட்சியின் மூன்றாவது தசாப்தத்தில் சிரியாவில் மோசமான பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும், இந்த மிகப்பெரிய சவாலில் இருந்து அதிபர் தப்பியதாகத் தோன்றியது.
இருப்பினும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடங்கியது, இதனால் காஸா போர் ஏற்பட்டது. அதன் விளைவுகளை லெபனானும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. குறிப்பாக அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்பொலாவை இது பெரிதும் பாதித்தது.
இந்தப் போர்ச் சூழல் ஹெஸ்பொலாவுக்கு அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் உட்படப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது.
லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த அதே நாளில், இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படைகள் சிரியாவில் திடீர் தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் இரண்டாவது நகரமான அலெப்போவை கைப்பற்றினர்.
தெற்குப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியதை அடுத்து அவர்கள் ஹமா மற்றும் பிற நகரங்களையும் தற்போது கைப்பற்றியுள்ளனர் .
இதேவேளை ‘இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர், இனி பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.
சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.