பீஹார் தேர்தல் முடிவால் பிரதமர் மோடி மகிழ்ச்சி!

102 views

நல்லாட்சி, வளர்ச்சி, பொது நல உணர்வு மற்றும் சமூக நீதி வென்று உள்ளது என பீஹார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:

நல்லாட்சி, வளர்ச்சி, பொது நல உணர்வு மற்றும் சமூக நீதி வென்றுள்ளது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்ததற்காக பீஹாரில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான தீர்ப்பு, மக்களுக்கு சேவை செய்யவும், பீஹாருக்காக உறுதியுடன் பணியாற்றவும் எங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

அயராது உழைத்த ஒவ்வொரு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பொதுமக்களை அணுகி, எங்கள் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு பொய்யையும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் காலங்களில், பீஹாரை மேம்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாநிலத்தின் கலாசாரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கவும் நாங்கள் அயராது உழைப்போம். இளைஞர்கள் மற்றும் பெண்கள் வளமான வாழ்க்கைக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜே.டி.யூ. தலைவர் நிதிஷ்குமார் உட்பட என்.டி.ஏ. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.