ஜுட் சமந்த
ஆணமடுவ, ஊரியாவ – சுவர்ணபாலியாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தசநாயக்க இலங்ககோன் என்ற நபர், கடந்த 11ஆம் திகதி நண்பர்கள் இருவரைத் தனது வீட்டுக்கு அழைத்து உற்சாகமாக மது விருந்து அளித்துள்ளார். நண்பர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த அந்த தருணம், அடுத்த சில மணிநேரங்களில் இரத்தக் களறியாக மாறும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மது விருந்து நிறைவடைந்த பின்னர், தனது கையடக்கத் தொலைபேசி காணாமல் போயிருப்பதை அவர் கவனித்துள்ளார். இது தொடர்பில் உடனிருந்த இரு நண்பர்களிடமும் விசாரித்துத் தேடியபோது, விருந்தில் பங்கேற்ற ஒரு நண்பரிடமே தொலைபேசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது.
அன்றைய தினம் மாலையில், அவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தலாஹேன குளத்திற்கு நீராடுவதற்காகப் புறப்பட்டுள்ளார். ஆனால், குளத்திற்குச் செல்லும் கிளை வீதியில் நண்பர்கள் இருவரும் மறைந்திருந்து தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியிருந்தனர். தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்த அவர்கள், முதலில் தடியாலும் பின்னர் கோடாரியாலும் இரக்கமின்றி சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர்.
மனைவியின் கதறலுக்கு மத்தியில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, உடனடியாக 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் ஆணமடுவ மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இத்தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய ஆணமடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


