வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

63 views

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. 

இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜகத் சந்திரலால் இதனைத் தெரிவித்தார். 

“கடந்த பட்ஜெட் விவாதத்தில், எங்கள் சேவை யாப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார். 

சேவை யாப்பு மே 1 ஆம் திகதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என என்று கூறினர். 

இன்று, அது ஒரு பொய்யான வாக்குறுதியாக மாறிவிட்டது. 

கிராம உத்தியோகத்தர் கூட்டணியின் திருத்தங்களுடன் இந்த சேவை யாப்பை உடனடியாக வர்த்தமானியில் வெளியிட்டு அமுல்படுத்துமாறு இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். 

இல்லையெனில், இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும். 

அதேநேரம் கடந்த பட்ஜெட்டில் 20 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. 

ஒன்றிணைந்த கூட்டணியாக வரவிருக்கும் பட்ஜெட்டில் இந்த ஒதுக்கீடுகள் எங்களுக்குக் கிடைக்காவிட்டால், நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றார்.