கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அலவத்தகம தலைமையிலான மது வரிஅதிகாரிகள் இணைந்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 05) கல்பிட்டி மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகளை அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 64 பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாயிரம் (19,000) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
