சித்திரைப் புத்தாண்டு பருவக்காலத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 10 கோடியைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்ததாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய தெரிவித்தார்.
அதன்படி, மேற்படி காலகட்டத்தில், அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 10 கோடியே 23 இலட்சத்து 78,800 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 11 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 163,541 வாகனங்கள் பணித்ததாகவும், அதன் ஊடாக 54,066,450 ரூபா வருமானம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஏப்ரல் 12 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் 134,195 வாகனங்கள் பயணித்ததாகவும், அதன் வருமானம் 47,012,350 ரூபா எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய சுட்டிக்காட்டினார்.