ஜூட் சமந்த
தற்போதைய காலப்பகுதியில் அதிகரித்து வரும் தொற்றுநோயல்லாத நோய்கள் மற்றும் முதியோர் சனத்தொகை ஆகிய சவால்களை முறியடிப்பதற்கான முறையான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சிலாபம் மருத்துவச் சங்கம் மற்றும் இலங்கை மருத்துவச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வருடாந்த கல்வி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “ஒத்துழைப்பின் ஊடாக மருத்துவ சிறப்பை நோக்கி” எனும் கருப்பொருளில் சிலாபம் பொது வைத்தியசாலையில் இந்த அமர்வுகள் இடம்பெற்றன.
சுகாதார சேவையின் தரம் மற்றும் முறைமையை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இவ்வாறான கல்வி அமர்வுகள் மிகவும் அவசியமானவை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் இத்தகைய அமர்வுகள் ஒரு சிறந்த களமாக அமைகின்றன. குறிப்பாக, நோயாளர்களுக்கு உயர்தரமான சிகிச்சைகளை வழங்குவதற்கும், மருத்துவ வழிகாட்டல்களைப் புதுப்பிப்பதற்கும் இத்தகைய வருடாந்த அமர்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டின் மருத்துவத் துறையை உயர் மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை மருத்துவச் சங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்பையும் அவர் இதன்போது பாராட்டினார்.
எந்தவொரு சவால்கள் வந்தபோதிலும், சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அண்மையில் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டபோது, அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு மகத்தானது என்று அவர் தெரிவித்தார். ஒரு பேரழிவிற்குப் பிறகு மீளக்கட்டியெழுப்பப்படும்போது குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கல்வி அமர்வுகளில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் தொடர்பான நவீன மருத்துவ முன்னேற்றங்கள், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுக்கட்டுப்பாடு மற்றும் பாம்புக்கடி முகாமைத்துவம் போன்ற பல காலோசிதமான தலைப்புகளில் விசேட விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிகழ்வின் போது, சிலாபம் மருத்துவச் சங்கத்தினால் தொகுக்கப்பட்ட ‘Journal of the Chilaw Clinical Society (JCCS) – Volume 01’ சஞ்சிகையின் முதல் பிரதி, சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் உதான ரத்னபாலவினால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, சிலாபம் மருத்துவச் சங்கத்தின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கீதிகா மஞ்சநாயக்க மற்றும் இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக்க உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டனர்.



