அனைவரும் நல்வாழ்வு வாழ இந்த உயரிய நாளில் பிரார்த்திப்போம்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன்.
புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக!
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறைத் தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த தியாகத்தினை வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இந்த ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.
ஏகத்துவம் ,இறையச்சம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு போன்ற உயரிய குணவியல்புகளை வருடாவருடம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கும் உலகத்திற்கும் போதித்துச் செல்கின்றது.
தினந்தினம் துயரமிகு வாழ்வை அநுபவிக்கும் பலஸ்தீன் மக்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்து இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஆரவாரமின்றி அனுஷ்டிக்கும் படி உங்களை நான் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
பொருளாதாரத்தில் வீழ்ந்த எம்தாய்நாடு தற்பொழுது அந்நிலையில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவடைந்து வருகிறது . இந்நிலை மேலும் முன்னேற்றமடைந்து விரைவில் நாட்டில் பொருளாதாரம் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் முற்று முழுதாக நீங்க ஏக இறைவனை இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி.
கே.காதர் மஸ்தான்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்