ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகின்றன.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தலைமையிலான 70 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடைந்தது. அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. லெபனானில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் முந்தைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும் என்று சபாநாயகர் கலிபாப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறுகையில், ஈரான் நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்கு வந்தால் தாங்களும் ஒத்துழைக்கத் தயார் என்றும், ஆனால் எங்களை ஏமாற்ற நினைத்தால் பேச்சுவார்த்தைக் குழு அதற்கு இணங்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், “ஈரானிடம் எந்த துருப்புச் சீட்டும் (cards) இல்லை” என்றும், பேச்சுவார்த்தைக்காக மட்டுமே அவர்கள் தற்போது உயிர் பிழைத்திருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த புதன்கிழமை மட்டும் 357 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் ஈரான்-அமெரிக்க போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்காது என்று அமெரிக்கா கூறினாலும், அதை ஈரான் கடுமையாக வலியுறுத்தி வருகிறது.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரான் ஏற்படுத்தியுள்ள முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் மீதான தனது அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை முன்னிட்டு இஸ்லாமாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் போர்நிறுத்தம் எட்டப்படுமா அல்லது இழுபறி நீடிக்குமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


