அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (15) நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “எங்கள் குழு வொஷிங்டன் செல்கிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்பு எங்கள் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது குறித்து இருதரப்பு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடினோம். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார்.