இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்கள், கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்திலும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
வெற்றி தொடர்பாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய இருப்புக்காக கிளிநொச்சி மக்கள் மிகப்பெரிய ஆணையை எமக்கு வழங்கியுள்ளனர். தூய கரங்களோடு, தூய நோக்க சிந்தனையோடு, அறத்தின் வழி கெளரவமான அரசியலை எமது மக்களுக்கு வழங்குவோம். அபிவிருத்தி பணிகளிலும் நிரந்தரமான அபிவிருத்தி பணிகளை செய்வதற்கும் அதற்குரிய முன்னேற்றத்தை காட்டுவதற்கும் இந்த காலம் பயன்பாடுடையதாக மாறும் என கருதுகிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கான எழுச்சிக்கான தேர்தலாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றுக்கருத்துக்களை பிழைகளை விட்டிருந்தாலும் இந்த தேர்தலில் மிகத்தெளிவாக தமிழ்த்தேசியத்திற்கான தமது வாக்குகளை அளித்துள்ளனர். ஆகவே வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் அபிலாசை உள்ளது. இப்பொழுது உள்ள அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி அனுர அரசாங்கத்திற்கு ஒரு செய்தியாக சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடன் பேசி ஒரு அரசியல் தீர்வை காண போறீர்களா அல்லது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய பொதுஜன வாக்கெடுப்பை நடாத்தப்போறீர்களா என்ற செய்தியைத்தான் சொல்லியிருக்கிறது.
சமாதானம் பற்றியும் அதிகாரப்பகிர்வு பற்றியும் மெத்தனப்போக்குடன் உரிய தூரநோக்கு சிந்தணையில்லாமல் இருக்கிற அரசாங்கத்திற்கு இந்த தேர்தல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் அரசியல் தீர்வு என்பது எவ்வளவு முக்கியம், எமக்கு நடந்தது இனப்படுகொலை இதற்கான நேர்மையான நீதியான விசாரணை பொறுப்புக்கூறலை இந்த அரசாங்கம் தர தவறினால் அவர்களுக்குரிய பாடம் கற்பிக்கப்படும் என்ற செய்தியை வடக்கு கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தெளிவாக சொல்கிறது.
எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து உள்ளூராட்சி மன்றங்களை கொண்டு செல்ல முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
