ஜூட் சமந்த
ஆரச்சிகட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தச் சங்கத்தின் பொது முகாமையாளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் கடந்த 4 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
மாதம்பே – புதிய நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 ஆம் திகதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான நான்கு லெட்ஜர் (Ledger) புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் துமிந்த தர்மவன்ச சுபசிங்க ஆரச்சிகட்டுவ காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
தலைவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், சந்தேகநபரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்த நான்கு லெட்ஜர் புத்தகங்களையும் மீட்டுள்ளனர். சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தின் போது பல நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாகச் சிலாபம் உதவி கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தினால் தற்போது விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்த ஆவணத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


