ஜூட் சமந்த
விசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த இரு இளைஞர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கடந்த வியாழக்கிழமை (02/12) கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரில் “EGA Visa Consultancy“ என்ற பெயரில் நிறுவனமொன்றை நடத்தி, ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி, பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அந்த நிறுவனம் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
இந்த மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த கம்பளை மற்றும் தலாத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து 7 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (02/13) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையானது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் மேற்பார்வையின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி. ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


