சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேபோல், நாடு முழுவதிலும் உள்ள சமாதான நீதவான்களின் தகவல்கள் அடங்கிய தரவுத்தளம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஒரு பிரதியை அத்தாட்சிப்படுத்தும் நபர் உண்மையான சமாதான நீதவான்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் இப்பதவிக்கான நியமனங்களை வழங்கும்போது, அதிகபட்ச வயது எல்லை 75 வயது வரை மட்டுமே அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இனி இந்தப் பதவி அரசியல் ரீதியாக வழங்கப்படமாட்டாது. அதேபோல், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுய விபரக் கோவையை புதுப்பிப்பதற்கான புதிய முறையை நாம் உருவாக்கியுள்ளோம்.
கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக இதனை உறுதிப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
தவறிழைக்கும் சமாதான நீதவான்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை நாம் தயார் செய்துள்ளோம்.
முன்னர் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.
சிலர் 5-10 வருடங்களாக அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால், மிக விரைவில் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கும் பணியை முன்னெடுப்போம். அப்போது, எங்கு முத்திரை இடப்பட்டாலும் அவர் தகுதியுள்ள சமாதான நீதவான்தானா என்பதை எம்மால் அறிய முடியும்.
சிக்கலான ஆவணங்களை வாசித்துப் புரிந்துகொள்வதற்கு முறையான மனநிலை மற்றும் ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்பதால், எதிர்கால நியமனங்களுக்கான வயது எல்லை 75 என குழு தீர்மானித்துள்ளது.
அதனை மாற்றுவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.


