2025 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நேற்று (29) வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் நேற்று (29) வரையான காலப்பகுதியில் 928,787 கிலோ ஹெராயின், 1,396,709 கிலோ ஐஸ், 11,192,823 கிலோ கஞ்சா, 27,836 கிலோ கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ ஹாஷிஷ் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (29) முழுவதும் மேலும் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்துக்கொண்டுள்ளன.
சோதனை நடவடிக்கையின் போது, 25,111 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 10,128 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்படி, இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுக்காக 948 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த சோதனை நடவடிக்கையின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6,695இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.