ஜூட் சமந்த
இத்தாலியில் உள்ள இசைக்குழு ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக முகநூல் (Facebook) மூலம் விளம்பரம் செய்து, சுமார் 3,750,000 ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் தொடர்பாக சிலாபம் பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆனவிலுந்தாவ – நல்லதரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ஹர்ஷண மதுஷான் திசேரா மற்றும் செங்கலோயா பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய பட்டபெதிகே திமுத்து மிஹிரான் பெரேரா ஆகிய இருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தின்படி, ஜா-எல – கெப்பும்கொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முகநூலில் வெளியிட்ட விளம்பரத்தின் ஊடாகவே இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இத்தாலிய இசைக்குழுவில் வேலை பெற்றுத் தருவதாக அந்த நபர் வழங்கிய வாக்குறுதியை நம்பி, முறைப்பாட்டாளர்கள் இருவரும் அவரிடம் முறையே 13 இலட்சம் ரூபா மற்றும் 2,450,000 ரூபா என மொத்தமாக 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும், திட்டமிட்டபடி இத்தாலிய இசைக்குழுவில் வேலை பெற்றுத் தரப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தாம் வழங்கிய பணத்தை மீண்டும் கேட்டபோது, அந்த நபர் முறையான பதில் எதனையும் வழங்காது இழுத்தடிப்பு செய்து வந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


