நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டிருந்தார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட திறந்த பிடியாணையைத் தவிர்த்து, இந்தியாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பொடி லெசி இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இரண்டு அதிகாரிகள் இன்று காலை குறித்த சந்தேக நபரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தனர்.
சந்தேக நபரின் பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகள்
இச்சந்தேக நபர் இலங்கையின் தென் மாகாணத்தில், குறிப்பாக மீட்டியகொட மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்கள், பரஸ்பர உடன்படிக்கைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையின் அடிப்படையில் இவரை இலங்கைக்கு கொண்டு வர முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையானது பொதுப் பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி தலையீட்டின் கீழ் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) மூலம் இதுவரை 29 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சிவப்பு அறிவித்தல் இன்றியே, அந்தந்த நாடுகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட மீறல்கள் மற்றும் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் இன்றைய சந்தேக நபரையும் சேர்த்து மொத்தம் 14 பேர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் “நாடே ஒன்றிணைந்த தேசியப் பணி” (Rata Ma Ekata) எனும் வலுவான பொறிமுறையின் ஒரு அங்கமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
தலைமறைவாக இருக்கும் ஏனைய குற்றவாளிகளையும் 2026 ஆம் ஆண்டிற்குள் இலங்கைக்குக் கொண்டு வர அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




