இந்தியா, இஸ்ரேல் இடையே 27 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, விஞ்ஞானிகள், தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், புதுமை, தொடக்க நிறுவனங்கள் மற்றும் வணிக கூட்டாண்மைகளில் குறிப்பாக விவசாயம், நீர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு மகத்தான ஆற்றலைக்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, நீர்வளங்கள், விவசாயம் மற்றும் பல துறைகளில் இஸ்ரேலிய இளைஞர்களின் முன்னோடிப் பணிகளை பார்த்தேன். இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், உற்பத்தி செய்யவும், தொழில்நுட்ப கூட்டாண்மைகளை உருவாக்கவும், உலகளாவிய சவால்களுக்கான தீர்வுகளை கூட்டாக உருவாக்குவதற்கு இந்தியாவின் திறமையான இளைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்’ என்றார்.



