இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று (30) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெயர்கள் கிடைத்தவுடன் மறுநாள் (31) அந்த பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறினார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி தொடங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்னர், தெரிவு செய்யப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, தேர்தல் ஆணைக்குழு மே 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று 21 நாட்கள் கடந்த பின்னரும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50%க்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட அந்த உள்ளூராட்சி மன்றத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பெயர்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இன்று நள்ளிரவிற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.