இயற்கையின் சமநிலையின்மை மனித வாழ்வின் அடித்தளத்தையே உலுக்கத் தொடங்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எல் நினோ (El Niño) காலநிலைக் காரணியால் இலங்கையின் பல மாவட்டங்கள் தற்போது சொல்லணா வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்த வறட்சி வெறும் குடிநீர் தட்டுப்பாட்டோடு முடிந்துவிடப் போவதில்லை; அது நமது எதிர்காலச் சந்ததியின் உயிர்களையே மெல்லப் பறிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடாக உருவெடுத்துள்ளது என்பதுதான் தற்போதைய பேரதிர்ச்சித் தகவல்.
இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் வாழும் பிஞ்சுக் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் நாள்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மத்தியில் இந்த அபாயம் தீவிரமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர், விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ இது குறித்து விரிவான எச்சரிக்கைக் குறிப்பொன்றை முன்வைத்துள்ளார். கொளுத்தும் வெயிலும் நீண்டகால வறட்சியும் ஒருபுறம் விவசாய உற்பத்தியை முற்றாகப் பதம் பார்த்துள்ளதுடன், கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புற விவசாயக் குடும்பங்களின் அன்றாட வருமானத்தை வேரறுத்துள்ளது. சந்தைகளில் தரமான ஊட்டச்சத்துமிக்க உணவுகளின் விலை விண்ணை முட்ட, வருமானத்தை இழந்த எளிய மக்களால் ஒருவேளை சத்தான உணவைக் கூடத் தட்டுகளில் வைக்க முடியாத கையறு நிலை உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியின் முதன்மைப் பலிக்கடாவாக மாறப்போவது நாட்டின் சிறுவர்கள்தான் என்பது நெஞ்சை உலுக்குகிறது. 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான வளரிளம் பராயத்தினர் வரை இதனால் பாரிய உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ளும் விளிம்பில் நிற்கின்றனர்.
இதனைவிடவும் கவலைக்குரிய உண்மை என்னவென்றால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ‘திரிபோஷ’ விநியோகத் திட்டம் நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே பலவீனமடைந்து, சீராகக் கிடைக்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இவ்வாறானதொரு பலவீனமான சூழலில், வறட்சியும் உணவுத் தட்டுப்பாடும் மேலும் நீடித்தால் எமது பிள்ளைகளின் ஆரோக்கியக் கட்டமைப்பு முற்றாகச் சரிந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
“பாரிய உணவுப் பஞ்சமும், கட்டுப்படுத்த முடியாத ஊட்டச்சத்துப் பேரழிவும் நாட்டைச் சூழ்ந்து கொள்வதற்கு முன்னதாகவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்” என விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ மிகத் தீர்க்கமாக வலியுறுத்தியுள்ளார். இனிமேலும் காலதாமதம் செய்தால், நாம் இழக்கப்போவது வெறுமனே உணவுப் பயிர்களை மட்டுமல்ல, இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையையும்தான்.


