சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்தினார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!
காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
புதிய காத்தான்குடி 03 பகுதியைச் சேர்ந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை காத்தான்குடி பாத்திமா பாலிகா பாடசாலையில் கற்றதுடன், தற்போது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.
31 நாடுகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 12 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அதில் 2 மாணவர்கள் மாத்திரமே இலங்கை சார்பாக வெண்கலப்பதக்கம் வென்றுள்ளதுடன், அதில் ஒருவராக ஜனூஸ் ஆரிஸ் வெற்றிபெற்று திகழ்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியாவின் லக்ணோவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாணவன் தான் பிறந்த மண், பாடசாலை, கிழக்கு மாகாணம் மற்றும் நாடு முழுவதற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரின் இச் சாதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று வாழ்த்தி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.