அறிவொளி மங்கும் வகுப்பறைகள்: இலங்கையின் பாடசாலைக் கல்வியில் நிலவும் பாரிய நெருக்கடி
இலங்கையின் இலவசக் கல்வி முறையானது ஆசியாவிற்கே முன்மாதிரியாகக் கருதப்பட்டாலும், இன்று அது ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதை அண்மைக்கால புள்ளிவிபரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நாட்டின் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் சிறுவர்களின் கல்வி கற்கும் சூழல், ஆசிரியர்களின் பற்றாக்குறையாலும் மாணவர்களின் வரவு வீழ்ச்சியாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையிலுள்ள மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 10,047 ஆகும். இவற்றுள் 3,065 இற்கும் அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 இற்கும் குறைவாகவே உள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரு தேசியப் பாடசாலையும் இந்த குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையைக் கொண்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது, மாணவர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாடு முழுவதும் உள்ள 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வாறு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலையும் அடங்குவது கல்வியமைப்பின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது.
மேலும், 51 முதல் 100 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 1,648 ஆகும், இவை அனைத்தும் மாகாணப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்கால சந்ததியினரின் கல்வி ஆர்வத்தைக் காட்டும் முதலாம் தர அனுமதி வீதமும் 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு 266,281 பிள்ளைகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி என்பது ஒரு நாட்டின் உயிர்நாடி. ஆனால், ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மிகக்குறைந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இயங்கி வருவது அந்த உயிர்நாடி மெல்ல மெல்லப் பலவீனமடைந்து வருவதையே காட்டுகிறது. இந்த நெருக்கடி நிலை தொடருமானால், கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
எதிர்கால சந்ததியினரின் கனவுகள் கருகிவிடாமல் இருக்க, சிதைந்து வரும் இந்தப் பாடசாலைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


