இலங்கையிலுள்ள நுகர்வோரின், குறிப்பாகக் குழந்தைகளின் பிரதான ஊட்டச்சத்து மூலமாக விளங்கும் பதப்படுத்தப்பட்ட திரவப் பாலின் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மிக முக்கியமான அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட திரவப் பால்களில் நச்சுத்தன்மையைக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குவிதி இனி கட்டாயமாக்கப்படவுள்ளது.
திரவப் பாலில் பூஞ்சைகளால் உருவாகக்கூடிய ‘அஃப்லாடாக்சின்’ (Aflatoxin) என்ற ஆபத்தான நச்சுப் பொருளின் அளவு இனி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும். இலங்கையில் விற்பனையாகும் பாலின் தரம் குறித்து நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.
இலங்கை தரக்கட்டளை நிறுவனம் (SLSI) வெளியிட்டுள்ள SLS 1815 தரநிலைகளுக்கு அமைய, பதப்படுத்தப்பட்ட திரவப் பாலில் உள்ள அஃப்லாடாக்சின் நச்சின் அளவு ஒரு கிலோகிராமுக்கு 0.5 மைக்ரோகிராம் (0.5 µg/kg அல்லது ppb) என்ற மட்டத்தை விட அதிகரிக்கக் கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவை மீறும் எந்தவொரு திரவப் பால் தயாரிப்பும் சந்தைக்குள் நுழைவது சட்டவிரோதமாகும்.
அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், இந்த சட்டம் வெறும் சில்லறை வியாபாரிகளை மட்டும் கட்டுப்படுத்தப் போவதில்லை. உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து வழங்குநர்கள் என பாலின் விநியோகச் சங்கிலியில் உள்ள அனைவரும் இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். வரம்பை மீறும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதோ அல்லது சந்தைப்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ், அதிகார சபையின் பதில் தவிசாளர் எஸ். எம். டி. சூரியகுமாரவின் கையொப்பத்துடன் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. திரவப் பால் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள இந்த புதிய ஒழுங்குவிதி, வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


