புற்றுநோய் மரணங்களைக் குறைக்கப் புதிய நடவடிக்கை: கொழும்பில் நவீன முன்கூட்டியே கண்டறியும் மையம் திறப்பு
இலங்கையின் பிரதான புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மையம் (Cancer Early Detection Center – CEDC), கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் புதிய பொலிவுடன் இன்று (09) காலை திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தலைமையில் இந்த மையம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் (OPD) தொற்றுநோய் மருத்துவக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அமையப்பெற்றுள்ளது.
இந்த மையம் பிரதானமாக இலங்கையில் அதிகளவில் காணப்படக்கூடிய மூன்று புற்றுநோய் வகைகளைக் கண்டறிவதில் விசேட கவனம் செலுத்துகிறது,
• மார்பகப் புற்றுநோய் • கருப்பை வாய்ப் புற்றுநோய் • வாய்ப் புற்றுநோய்
பரிசோதனைகளின் மூலம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட உடனேயே, அவர்களைத் தடையின்றி மேலதிக சிகிச்சைகளுக்காக விசேட நிபுணத்துவ மருத்துவச் சிகிச்சையகங்களுக்கு (Clinics) பரிந்துரைக்கும் துரித முறைமை இங்கு நடைமுறையில் உள்ளது. இந்த மையம் அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மையத்தை நிறுவுவதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என பிரதி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். தற்போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய வைத்தியசாலைகளை அண்மித்து இத்தகைய 5 மையங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 100 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்படுவதுடன், தினமும் சுமார் 40 மரணங்கள் பதிவாகின்றன. நோயாளிகள் மிகத் தாமதமாக சிகிச்சைக்காக வருவதைத் தடுத்து, ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் மூலம் இந்த மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இம்மையங்களின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மையம் 2004 ஆம் ஆண்டு முதல் நாரஹேன்பிட்ட பகுதியில் இயங்கி வந்ததுடன், கடந்த 22 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் பேருக்குப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு ரோட்டரி சங்கம் (Rotary Club) தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் உள்ளிட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




