ஜூட் சமந்த
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி வென்னப்புவ – வெல்லமங்கரைய துறைமுகத்திலிருந்து ‘தினிதி துவ’ மற்றும் ‘தினிதி துவ 1’ ஆகிய இரு படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜனவரி 29 ஆம் திகதி அவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் அவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் வர்ணகுலசூரிய நிஹால் பீரிஸ், எஸ். ஷெவான் திவங்க உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர். இவர்களில் நால்வர் பலத்த காயமடைந்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏனைய மீனவர்கள் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான மீனவர் ஒருவர் கூறுகையில், இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிஸ்டல்கள், கத்திகள் மற்றும் ஹாக்கி மட்டைகளைப் பயன்படுத்தித் தங்களைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர்களிடமிருந்த சாட்டிலைட் போன்களைக் கோரி அச்சுறுத்தியதுடன், வலைகள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் வெட்டி அழித்ததாகக் குற்றம் சுமத்தினார். இவர்களில் இருவர் சரளமாகச் சிங்கள மொழியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ்,
நமது நாட்டு எல்லைக்குள் வைத்து மீனவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசாங்கம் உடனடியாக இதில் தலையிடாவிட்டால் இத்தொழிலைக் கைவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்,. இச்சம்பவத்தைக் கண்டித்து வெல்லமங்கரைய துறைமுகத்தில் மீனவக் குடும்பத்தினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.






