இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வரலாற்றில் முதன்முறையாக, வனவிலங்கு கள அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (21) கிரிதலே தேசிய வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
அதிகாரிகளின் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளால் வீழ்ச்சியடைந்திருந்த வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தை மறுசீரமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
வனவிலங்கு குற்றங்களைத் தடுத்து, வனப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், வனவிலங்கு அதிகாரிகளின் ஆத்ம பலத்தை (மன உறுதி) கட்டியெழுப்புவதற்காக புதிய அரசாங்கத்தின் விசேட திட்டமாக இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் 30 வனவிலங்கு கள அதிகாரிகள் அவர்களின் நீண்டகால சேவை மற்றும் வனவிலங்குத் துறையில் அவர்கள் பெற்றுக்கொண்ட கல்வித் தகைமைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பூசப்பட்ட பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
அந்த வகையில், பணி அர்ப்பணிப்பு மற்றும் களத் திறமை, கோட்பாட்டு ரீதியான பயிற்சி மற்றும் களச் செயல்பாடு, ஒழுக்கம் மற்றும் விசேட நடவடிக்கைகளுக்கான பங்களிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கெளரவிக்கப்பட்டனர்.
இத்தகைய கௌரவிப்புகள் வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு வளங்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் தற்போது குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக நிலவி வந்த உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதுடன், யானை வேலி பராமரிப்புப் பணிகளுக்காக பல்துறை அபிவிருத்தி அதிகாரிகள் நிரந்தர அரசாங்க சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அதிகாரிகளின் பணிகளை இலகுபடுத்தும் வகையில் நீண்டகாலமாகத் தேவையிலிருந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பை உயர்த்துவதற்கு இந்த பதக்கங்கள் வழங்கும் முயற்சி ஒரு சிறந்த தூண்டுகோலாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்நிகழ்வில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, கிரிதலே தேசிய வனவிலங்கு மற்றும் பயிற்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.ஜே. விக்கிரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


