ஜெருசலேம்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி நான்கு வாரங்கள் நிறைவடையும் நிலையில், சனிக்கிழமை அன்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மோதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளன. இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையத்தைக் கொண்டுள்ள டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள ஆராத் (Arad) ஆகிய தெற்கு நகரங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேலிய அவசரக்கால சேவைகளின்படி, ஆராத் நகரில் குறைந்தது 88 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நகரின் மையப்பகுதியில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிமோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர். அங்குள்ள பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
பாதுகாப்புத் தோல்வி:
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air defence systems) இந்தத் தாக்குதலின் போது செயல்பட்ட போதிலும், சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து வந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான டிமோனா நகரில் இஸ்ரேலின் ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இருப்பினும், அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அப்பகுதியில் கதிர்வீச்சு அளவு சாதாரணமாகவே இருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு IAEA இயக்குனர் ஜெனரல் ரஃபேல் கிரோசி வலியுறுத்தியுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை ஈரானின் நடன்ஸ் (Natanz) அணுசக்தி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானின் மாலெக் அஷ்டார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.
ஈரானின் இந்த நடவடிக்கையானது “பதிலடிக்கு பதிலடி” (eye-for-an-eye) என்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதாக மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார். வெறும் போர்நிறுத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், ஈரானின் அச்சுறுத்தல்களை நம்பகமானதாக மாற்றி நீண்டகால பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது இஸ்ரேலுக்கு ஒரு “கடினமான” இரவு என்று வருணனை செய்துள்ளதோடு, ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார். பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



