மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய தாக்குதலுக்கு மூன்று வாரங்கள் கடந்துள்ளன.
இந்த காலகட்டத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமெரிக்க ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களால் அமெரிக்காவின் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.29 ஆயிரம் கோடிக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் அமெரிக்காவில் வெளியாகும் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் இந்த போரால் ஏற்படவுள்ள விளைவுகள் குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.
போர் தொடங்கிய முதல் மூன்று வாரங்களிலேயே அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பகால கணக்கீட்டின்படி 1.4 பில்லியன் டாலர் முதல் 2.9 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை அமெரிக்க பாதுகாப்புத்துறை பட்ஜெட் தொடர்பான முன்னாள் அதிகாரி எலைன் மெக்கஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்திய தாக்குதல்களில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக எஃப்-35 வகை போர் விமானம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தவறுதலாக நடைபெற்ற தாக்குதலில் மூன்று எஃப்-15இ வகை போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஈராக் வான்வெளியில் இரண்டு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மோதிக் கொண்டதில் ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அமெரிக்க ராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில், ஐந்து கேசி-135 வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விமானங்கள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஈரான் தாக்குதல்களில் அமெரிக்காவின் பல அதிநவீன ஆளில்லா உளவு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக எம்.கியூ-9 ரீப்பர் வகையை சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு இழப்பு இந்த டிரோன்கள் அமெரிக்காவின் முக்கிய உளவு சாதனங்களாக கருதப்படுவதால், அவை சேதமடைந்தது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் நிறுவப்பட்டிருந்த ரேடார் அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த ரேடார் அமைப்புகள் எதிரி தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் முக்கிய சாதனமாக இருப்பதால், அவற்றின் சேதம் பெரும் இழப்பாக இருக்கும் என்கின்றனர்.
இதற்கிடையில் கிரீஸ் நாட்டின் சூடா விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘யுஎஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ கப்பலிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவமும் அமெரிக்க ராணுவத்திற்கு கூடுதல் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


