இந்தியப் பெருங்கடலில் அண்மையில் அரங்கேறிய நிகழ்வுகள் குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஈரானிய போர்க்கப்பல்களான IRIS Dena மற்றும் IRIS Bushehr ஆகியவற்றை இலங்கைக்கு வருமாறு இலங்கை கடற்படை தளபதி வாய்மொழியாக அழைப்பு விடுத்ததாக தசநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஈரானிய தூதரைச் சந்தித்தபோது, அந்த இரண்டு கப்பல்கள் குறித்து பல விரிவான தகவல்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.
“கடற்படை தளபதி ஏன் இந்த இரண்டு கப்பல்களையும் இலங்கை கடற்பரப்பிற்கு வருமாறு வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டார் என்பது வியப்பாக இருக்கிறது. அரசாங்கம் இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும், அவர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை அணிவகுப்பிற்காக (International Fleet Review) வந்த அந்த இரண்டு கப்பல்களையும் இந்தியா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்த பொறுப்பு இலங்கை மீது சுமத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்பினார். மத்திய கிழக்கு விவகாரங்களில் இலங்கை அரசு நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்றும், இக்கட்டான சூழலில் யாருடனும் கைகோர்க்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், IRIS Bushehr கப்பலில் இருந்தவர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் அரசாங்கத்தைப் பாராட்டியதுடன், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஒரு மிகப்பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


