ஈரானுக்கும் (Iran) ஹார்முஸ் நீரிணைக்கும் (Strait of Hormuz) இடையிலான உறவு என்பது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது.
ஹார்மூஸ் நீரிணை ஈரானின் தெற்கே அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவையும் (Persian Gulf) ஓமன் வளைகுடாவையும் (Gulf of Oman) இணைக்கும் ஒரு குறுகிய கடல் வழியாகும். இதன் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தற்போது மூண்டுள்ள போர்நிலை காரணமாக ஈரான் ஹார்மூஸ் நீரிணை போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளமை முழு உலகையும் கலங்கடித்துளளது.
ஈரான் அரசாங்கம் இது குறித்து இன்னும் முறையான உலகளாவிய அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், ஈரானிய கடற்படை வானொலி (Radio Broadcast) வழியாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு, “எந்தக் கப்பலும் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணை உலகிலேயே கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இடமாக இது கருதப்படுவதுடன், உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய்களில் சுமார் 20% முதல் 30% வரை இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. ஈரான் இந்த பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.
அமெரிக்கா அல்லது பிற நாடுகளுடன் பதற்றம் ஏற்படும் போது, “ஹார்மூஸ் நீரிணையை மூடிவிடுவோம்” என்று ஈரான் அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுவரும் அதேவேளை, அப்படி நடந்தால் உலக சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வடையும்.
ஈரான் தனது கடற்படை மற்றும் ஏவுகணைத் தளங்களை இந்த நீரிணையை ஒட்டிய பகுதிகளில் அமைத்துள்ளது. சர்வதேச சட்டப்படி இது ஒரு சர்வதேச நீரிணையாகக் கருதப்பட்டாலும், இதன் பெரும்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் இருப்பதால், இப்பகுதியைக் கடக்கும் கப்பல்களைக் கண்காணிக்கும் அதிகாரம் ஈரானிடம் உள்ளது.

ஈரானைப் பொறுத்தவரை, ஹார்மூஸ் நீரிணை என்பது ஒரு “பொருளாதார ஆயுதம்”. இதன் மூலம் உலக நாடுகளைத் தன் பக்கம் திரும்பச் செய்யும் வலிமையை ஈரான் இயற்கையாகவே பெற்றுள்ளமை உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
ஈரான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடம், ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கும் வல்லமை கொண்டது என்பது வியப்பிற்குரிய உண்மையாகும்
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20%, அதாவது தினமும் சுமார் 1.7 கோடி பேரல்கள் இந்த ஒரு குறுகிய பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 90% எண்ணெய் ஏற்றுமதி இந்த வழித்தடத்தைச் சார்ந்தே உள்ளது. ஒருவேளை ஈரான் இந்த வழியைத் தடுத்தால், உலக நாடுகள் சந்திக்கப்போகும் விளைவுகள் மிகவும் பாரதூரமாக அமைய வாய்ப்புள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் தனக்குத் தேவையான எரிபொருளில் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பெற்றுக்கொள்கிறது. 2024 மற்றும் 2026-ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக சிங்கப்பூர் உள்ளது. அதேபோல் பெருமளவு பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தற்போதைய ஹார்மோஸ் நீரினை போக்குவரத்து தடையால் மிக மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடம்பிடித்துளளது.
இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85%-ஐ இறக்குமதி செய்கிறது, இதில் 60% எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் எனவும், தொழிற்சாலைகள் முடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் நிலைகுலையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தாலும், போர் சூழல் தொடருமானால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் எரிபொருள் கொள்வனவில் பெரும் சிக்கலை சந்திக்கும் அதேவேளை, எரிபொருள் விலையிலும் பாரிய அதிகரிப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறான சூழ்நிலையிலே நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இல்லை என்ற விடயத்தையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தத் தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 டாலரைத் தாண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது உலகெங்கிலும் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கி, ஒரு மிகப்பெரிய உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு (Global Recession) வழிவகுக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த 33 கிலோமீட்டர் கடல் பகுதி அடைக்கப்பட்டால், அது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடப்படும் பெரும் சவாலாக அமையும்.



