அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனி (Ali Khamenei) கொல்லப்பட்டார்.
சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கமேனியுடன் சேர்த்து அவரது மகள், மருமகன் மற்றும் பேரனும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசு ஊடகங்கள் கமேனியின் மரணத்தை உறுதிப்படுத்தி, அவரை ஒரு “தியாகி” என்று போற்றியுள்ளன.
முக்கிய தலைவர்கள் உயிரிழப்பு
கமேனியுடன் சேர்ந்து ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். கமேனியின் மூத்த அரசியல் ஆலோசகரும் ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான அலி ஷம்கானி (Ali Shamkani) மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமைத் தளபதி முகமது பாக்பூர் (Mohammad Pakpour) ஆகியோரும் உயிரிழந்ததை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக, மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள 27 ராணுவ தளங்கள் மற்றும் டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகள் மீது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. கத்தாரில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பள்ளி மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோர் பலி
தெற்கு ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 95 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian), கமேனியின் படுகொலையை “ஒரு மாபெரும் குற்றம்” என்று கண்டித்துள்ளதோடு, இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். ஈராக் தலைவர் முக்தாதா அல்-சதர் கமேனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ஈராக்கில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தின் ‘கிரீன் ஜோன்’ பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


