ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு உலகளவில் பெரிய பதற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய போர், அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் மத்தியிலான போரில் இஸ்ரேல் எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள கணக்கின் படி, ஈரான் மற்றும் லெபனான் மீதான 40 நாட்கள் போருக்காக ஏற்பட்ட செலவு சுமார் 17.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று முதற்கட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் சேனல் 12 செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த செலவுகள் அனைத்தும் போரின் நேரடி ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்பட்ட பாதிப்புகளை உள்ளடக்கியது என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை இன்னும் இறுதியானது அல்ல, போர் சேதத்தை சரி செய்ய புனரமைப்பு செலவுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கணக்கிடும் போது இழப்புகளின் அளவு இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்துடனான தொடர்ச்சியான மோதலுக்கான நேரடி ராணுவ செலவுகள் சுமார் 40 பில்லியன் இஸ்ரேல் ஷெக்கல் இது தோராயமாக 12.9 பில்லியன் டாலராகும். இதில் ஆயுதங்கள், விமானப் பறக்கும் நேரம், ராணுவ வீரர்களின் பணி நாட்கள் மற்றும் சேதங்கள் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் தொடர்பான செலவுகள் 13 முதல் 14 பில்லியன் இஸ்ரேல் ஷெக்கல் இது தோராயமாக 4.2 முதல் 4.5 பில்லியன் டாலர் வரை இருக்கும். இவை இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 54 பில்லியன் ஷெக்கல் அதாவது 17.5 பில்லியன் டாலராகும்.
மேலும் ஈரான் போரால் ஏற்பட்ட சேதங்களுக்காக இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் அரசிடம் வியாழக்கிழமை காலை வரை 28,237 இழப்பீட்டு விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். இதில் 18,408 விண்ணப்பங்கள் கட்டிடங்கள் தொடர்பானவை, 2,594 விண்ணப்பங்கள் உபகரணங்கள் சேதம் சார்ந்தவை, 6,617 விண்ணப்பங்கள் வாகன சேதம் தொடர்பானவை.
மேலும் நகரங்கள் அடிப்படையில் பார்க்கும் போது டெல் அவிவ் நகரில் மட்டும் சுமார் 5,100 இழப்பீடு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து பீர் ஷெவா (3,600), அராத் (2,350), பெதா திக்வா (2,000), திமோனா (1,500) மற்றும் பெய்த் ஷெமெஷ் (1,400) ஆகிய நகரங்களில் அதிக இழப்பீடு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த போர் மூலம இஸ்ரேல் நாட்டிலும் பெரும் பொருள் மற்றும் நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதை காட்டுகிறது. சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA இந்த வாரம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவின் தினசரி உற்பத்தித் திறன் சுமார் 6 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது. கிழக்கு – மேற்கு பைப்லைன் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் அளவும் சுமார் 7 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது என அறிவித்துள்ளது.



