இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன.
இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார்.