மன்னார் எருக்கலம்பிட்டி மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் எருக்கலம்பிட்டி மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
லண்டன் வாழ் எருக்கலம்பிட்டி அமைப்பான எருக்கலம்பிட்டி பொதுநல மன்றத்தின் (EWO) பூரண அனுசரணையில் குறித்த இரண்டு பிரதேசங்களிலும் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 357 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு 3,300 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் எருக்கலம்பிட்டி ஜனாஸா சங்கத்தின் ஊடாக சில தினங்களுக்கு முன்பு வழங்கிவைக்கப்பட்டது.
அதனை அடுத்து புத்தளம் எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் வாழும், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற சுமார் 257 குடும்பங்களுக்கு 3,300 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகத்தினால் இன்று 15.12.2025 வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளில் வாழும் எருக்கலம்பிட்டி மக்களும் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தனர்.
இதனால் பலரின் சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இயல்புநிலைக்கு திரும்பவும் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இவைகளை கருத்திற்கொண்டு லண்டன் வாழ் எருக்கலம்பிட்டி அமைப்பான எருக்கலம்பிட்டி பொதுநல மன்றம் (EWO) தமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இவ்வாறான பாரிய நிவாரண உதவியினை செய்துள்ளது.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் எமது மக்கள் பேரிடர்களுக்கு முகம்கொடுத்தவேளை குறித்த எருக்கலம்பிட்டி பொதுநல மன்றம் (EWO) தயங்காமல் உதவிக்கரம் நீட்டி நிதி உதவிகளை செய்துள்ளதுடன், எருக்கலம்பிட்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் தொடர்ச்சியாக பெரும் பங்காற்றி வருகின்றது.
பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்களின் அபிவிருத்தியில் பல சந்தர்ப்பங்களில் பலதரப்பட்ட நிதிப்பங்களிப்புகளை செய்துள்ள எருக்கலம்பிட்டி பொதுநல மன்றம் (EWO) மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த புலமைப்பரிசில் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தமை கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதுமாத்திரமின்றி இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், ஊரில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும், குறித்த அமைப்பு பெரும் பங்காற்றி வருவதுடன், அதில் வெற்றியையும் கண்டுள்ளமை இளைஞர்களினால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் எருக்கலம்பிட்டி பொதுநல மன்றம் (EWO) எருக்கலம்பிட்டி மக்களுக்கு ஆற்றிவரும் தொடர்ச்சியான நல்ல பல சேவைகளுக்கு, எருக்கலம்பிட்டி மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






