இலங்கையில் இனிவரும் காலங்களில் ஏற்படவுள்ள மின்வெட்டுக்கு ஈரான் போர் காரணம் அல்ல என்றும், அதற்கு தற்போதைய ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்கவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்,.
நாவலப்பிட்டி ஸ்ரீ கவிஸ்வர வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘டிட்வா’ சூறாவளியினால் சேதமடைந்த நாவலப்பிட்டி விகாரையின் பாதுகாப்புச் சுவரை புனரமைப்பதற்காக, போதாகம சந்திம தேரரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தம்மச்சக்க’ அறக்கட்டளை ஊடாக 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி உதவி வழங்கும் நிகழ்விலேயே அவர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் பாரிய தவறுகளை இழைத்துள்ளதாக சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். குறிப்பாக, வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்காததே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
சுனாமி அனர்த்தத்தின் போது அரசாங்கம் வீடுகளையோ அல்லது தேவாலயங்களையோ கட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை, தன்னார்வ நிறுவனங்களே அனைத்தையும் செய்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், அதற்கான காணிகள் கூட இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
“சமூக ஊடகங்களில் இந்த அனர்த்தம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்கள் இன்னும் கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.


