ஜுட் சமந்த
“அம்மா நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன்… என்னைத் தேட வேண்டாம்! கட்டிலுக்கு அடியில் ஒரு கடிதம் வைத்திருக்கிறேன், அதை எடுத்துப் படியுங்கள்…” — தாய் ஒருவரின் காதுகளில் இடிபோல் விழுந்த இந்த ஒற்றை தொலைபேசி அழைப்பு, இப்போது மாதம்பை பகுதியையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகல்லவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 2 மாதங்களும் மட்டுமே நிரம்பிய, உள்ளூர் பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு திடீரென மாயமாகியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி காலை, தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட இந்தச் சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பதறிப்போன குடும்பத்தினர் நாலாபுறமும் மகளைத் தேடி அலைந்த வேளையில்தான், தாயின் தொலைபேசிக்கு அந்த அதிர்ச்சி அழைப்பு வந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், மாணவி தனது தாயை அழைத்துப் பேசிய தொலைபேசி இலக்கம், அவரது தந்தையுடன் கள்ளு உற்பத்தி ஆலையில் பணியாற்றிய இளைஞருடையது என்பது தெரியவந்துள்ளது. குறித்த இளைஞருடன் மாணவி காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவர் சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பகுதியை விட்டுச் சென்றுவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாதம்பை – இஸ்ஸம்மடில்ல பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தற்போது வவுனியா பகுதியில் ஏதோவொரு தொழிலில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாயமான சிறுமி குறித்தோ அல்லது அவரது காதலன் குறித்தோ இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில், மாதம்பை பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


