ஜூட் சமந்த
பட்டப்பகலில் நடுவீதியில் பொலிஸாரை வழிமறித்து கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, பின்னர் பொலிஸ் நிலையத்திற்கே வந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று லூணுவில பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் வேளையில் லூணுவில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களைக் கைது செய்யும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அவரது கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதித்தபோது, பொலிஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய புகைப்படங்களும் ரகசிய தகவல்களும் குவிந்திருந்தன. உடனடியாகச் சுதாகரித்துக்கொண்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளையும் தொலைபேசியையும் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டு சந்தேகநபரை வளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால், மின்னல் வேகத்தில் அந்த நபர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பொலிஸார் நிலையம் திரும்பத் தயாரான வேளையில், அடுத்த அதிரடி திருப்பம் அரங்கேறியது. தப்பியோடிய நபர், லூணுவில – கிரிமெட்டியான வத்தையைச் சேர்ந்த “ஓலு மரா” என்ற பிரபல குற்றவாளியுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் களமிறங்கினார். நடுரோட்டில் பொலிஸாரைக் கத்தியைக் காட்டி அச்சுறுத்திய அவர்கள், சாட்சியங்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்தச் சினிமா பாணி சம்பவம் தொடர்பில் லூணுவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து வாக்குமூலங்களை தீவிரமாகப் பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சற்றும் அச்சமின்றி “ஓலு மரா” பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்து மீண்டும் அடாவடித்தனத்தில் ஈடுபட முயன்றார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்ய முற்பட்டனர்.
பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க வெறித்தனமாக ஓடிய அந்த ஆசாமி, பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு வர்த்தக நிலையத்தின் கண்ணாடியைத் தன் உடலால் உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தார்.
கண்ணாடிச் சிதறல்கள் குத்தியதில் படுகாயமடைந்த “ஓலு மரா”வை பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். பலத்த காயங்களுக்குள்ளான அவர், தப்பியோட முடியாதவாறு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் லூணுவில பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


