கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த பொதிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், நாட்டை சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, கற்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கூறிய கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த பதின்மூன்று (13) சந்தேகத்திற்கிடமான பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட சுமார் 170 கிலோகிராம் முந்திரி பருப்புகள், 180 சவர்காரக்கட்டிகள், 90 கிலோகிராம் ஏலக்காய், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட 169 சிறிய போத்தல்கள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் அடங்கிய 90 பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்கும் கடற்படையின் தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்களால் இந்தப் பொருட்களைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல், அவற்றைக் கடலோரப் பகுதியிலேயே கைவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றதுடன் இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.



