ஜுட் சமந்த
இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான பூச்சிக்கொல்லி கிருமிநாசினிகள் மற்றும் ஏலக்காய் பொதிகள், கற்பிட்டி – கந்தக்குழிய விமானப்படை முகாமின் அதிகாரிகளால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
கற்பிட்டி, கந்தக்குழிய கடற்கரையை அண்டிய பகுதியில் இலங்கை விமானப்படையினரால் ‘துப்பாக்கிச் சூட்டு களம்’ என்ற விசேட பயிற்சி முகாமொன்று இயங்கி வருகின்றது. இப்பகுதியை மையப்படுத்தி பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே, இந்தியாவிலிருந்து கரையை அடைந்த குறித்த கடத்தல் பொருட்கள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக டிங்கி படகு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இராணுவ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விபரம்:
- ULTJMOS (150g): 320 பக்கட்டுகள்
- ATLAS (50ml): 800 பக்கட்டுகள்
- DHAN PREET (100ml): 100 பக்கட்டுகள்
- SHAR (100ml): 150 பக்கட்டுகள்
- LEOKEM Plus (100ml): 300 போத்தல்கள்
- JAFGOR (250ml): 80 போத்தல்கள்
- ஏலக்காய்: 22 கிலோகிராம் அடங்கிய பொலித்தீன் மூட்டை – 01
- சிறிய ரக டிங்கி படகு – 01
இப்பண்டங்களை நாட்டுக்குள் கடத்தி வந்த பிரதான சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறிவதற்கான எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் டிங்கி படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய கடத்தல்காரர்களைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


