ஜூட் சமந்த
கடன் தகராறு ஒன்றின் காரணமாக தொழிலதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாய்க்கூண்டில் அடைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு சந்தேகநபர்களை லுணுவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி – நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வென்னப்புவ – காலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 5 இலட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். குறித்த கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.
இந்த மோதலின் விளைவாக, பணத்தைக் கொடுத்த நபர் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து குறித்த தொழிலதிபரை நுரைச்சோலைப் பகுதியில் வைத்துக் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலதிபரின் உறவினர்கள் நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபர்கள் குறித்த விபரங்களை நுரைச்சோலை பொலிஸார் லுணுவில பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதன் அடிப்படையில், கடந்த 23ஆம் திகதி மாலை காலவத்தை பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டை லுணுவில பொலிஸார் அதிரடியாகச் சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த வீட்டின் பின்புறம் இருந்த நாய்க்கூண்டு ஒன்றிற்குள் தொழிலதிபர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் இதன்போது கண்டறிந்தனர். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றையும் கைப்பற்றியதோடு, கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பேரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட தொழிலதிபர் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


