வன்னியின் மைந்தனும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மஷூரின் எழில் கொஞ்சும் எருக்கலம் பிட்டியில் 15 ஆவது ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
முன்னாள் மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயில் இஸ்ஸதீனின் ஏற்பாட்டில், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் தலைமையில், ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மக்கள் வெள்ளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளிக்கப்பட்டதுடன், அவர் உதைப்பந்தாட்டப் போட்டியையும் மிகுந்த ஆவலுடன் கண்டுகளித்தார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் எருக்கலம்பிட்டி யூத் அணியினரை எருக்கலம்பிட்டி எப்.சீ அணியினர் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டனர்.
குறித்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் பெருந்திரளாகப் பங்குபற்றினர்.

