இலங்கையில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தவித சிக்கலும் இல்லாததால், எரிபொருளைப் பெறுவதற்கு மீண்டும் கியூஆர் (QR) குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய உடனடித் தேவை எதுவும் ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும், தற்போதைய நிலையில் பொதுமக்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், முன்னதாக நாட்டில் நிலவிய கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக, எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மட்டுமே கியூஆர் குறியீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று உறுதிபடத் தெரிவித்த அமைச்சர், விநியோகச் சங்கிலியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு தேவை அல்லது நெருக்கடி நிலை ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் கியூஆர் குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நாட்டின் சகல பாகங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்துகொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


