பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி கடற்பரப்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கடலட்டை பண்ணைகளை அகற்றும் முயற்சியின் போது, அதிகாரிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் பா.நிருபராஜ், பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இன்று கிராஞ்சி கடற்பகுதிக்குச் சென்று அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடலட்டை பண்ணைகளை அகற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கடலட்டை பண்ணையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பண்ணைகளே தமது வாழ்வாதாரம் என்றும், உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெறும் வரை இவற்றை அகற்ற வேண்டாம் என்றும் கோரி அதிகாரிகளை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
குறித்த கடலட்டை பண்ணைகள் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற நிலையில், இவை சட்டவிரோதமானவை என்பதால், அவற்றை அகற்றுமாறு உரிய திணைக்களங்கள் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியும் அவை அகற்றப்படாத நிலையில் அதிகாரிகள் இன்று அவற்றை அகற்றும் நோக்குடன் சென்றிருந்தனர்.
பண்ணையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு தற்காலிகத் தீர்வு எட்டப்பட்டது. இதன்படி:
- கடலட்டை பண்ணை அமைப்பதற்காக 122 இடங்கள் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த 122 பயனாளிகளின் பெயர் விபரங்களையும் வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக பிரதேச செயலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிபந்தனைக்கு சட்டவிரோத கடலட்டை பண்ணையாளர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதன் மூலம் அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.




