வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு!
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுத் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், வளச்சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்குள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்பட்டு வருகின்ற, பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் உட்பட 08 மாவட்டங்களிலும் உள்ள நாம் 26 யூலை 2025 ஆகிய இன்றைய தினம் ஒன்று கூடி குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

அரசே, இங்கு “நாங்கள்” யாரென்றால்:
- வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கப்பட்டுள்ள எந்திரத்தின் மிருகத்தனத்தின் கீழ் வாழ்ந்து வரும் தமிழர்கள் (அரசு கூட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது),
- அரசு புரிந்த பன்னாட்டுக் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்த உயிருள்ள சாட்சிகள்.
- வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவினர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் “நாங்கள்” என்பதில் முப்படைகள், அரச தொல்பொருள் துறை, வனவிலங்குகள், கடலோர பாதுகாப்பு, வனத்துறைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டுள்ள தங்களின் தாய்நிலத்திற்காகப் போராடும் மக்கள், தெற்கிலிருந்து வந்த மீனவர்களால் கடற்படை மற்றும் மீன்வளத் துறையின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மூதாதையர் மீன்பிடித்த தளங்களை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்கள், இறுதியாக “நாங்கள்” என்பது ஐ.நா. மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்.
சிங்கள அரச பொறிமுறை முன்னெடுத்த போரானது தமிழர்களின் இருப்பிடங்களையும் சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் திட்டமிட்ட வகையில் முற்றாக அழித்து தமிழர்களை வக்கற்ற நிலைக்குள்ளாக்கியது.
பல்லாயிரக்கணக்காணோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்
இராணுவமயமாக்கல் இடம்பெற்றதுடன் திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்புக்களும் சிங்கள் குடியேற்றங்களும் அதிகரிக்கப்பட்டன.
அரச பாதுகாப்புப் பொறிமுறையின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் பாதிக்கப்பட்டவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.

உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான திர்வினை இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதனால் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பன்னாட்டு சமூகத்திடம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்தனர்.
- தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பள்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல்வண்டும்
- ஈழத் தமிழ் மக்களுக்கு இடப்பெற்ற இனப்படுகொலைகளுக்கான நீதிப் பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
- தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சாவதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.
- இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
- செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
- தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும், (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)
- தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
- பயங்கரவாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

