சிறுபோக செய்கையில் கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் – விவசாயிகள் பாதிப்பு.
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை நாசம் செய்துவருகின்ற விடயம் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தின் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டு, பயிர்கள் தற்போது முளைக்க ஆரம்பித்து வெறும் 15-25 நாட்கள் கடந்த நிலையில், அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, ஊரியான், பன்னங்கண்டி பகுதிகளில் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த பெரும்போக நெற்ச்செய்கையிலும் நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
