தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 128 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 66 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்நாட்டு ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவின் அமேசான் மாகாணமான புடுமாயோவில் (Putumayo) உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்திலிருந்து திங்கட்கிழமை ஒரு ராணுவ விமானம் புறப்பட்டது. அதில் 115 ராணுவ வீரர்கள், 11 விமானப் படை ஊழியர்கள் மற்றும் 2 தேசிய காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 128 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த கோர விபத்து குறித்து கொலம்பியா ஆயுதப் படைகளின் தலைவர் ஜெனரல் ஹியூகோ அலெஜான்ட்ரோ லோபஸ் பாரெட்டோ கூறுகையில்:
“இந்தத் துயரமான விபத்தின் விளைவாக, எங்களது 66 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வரை 57 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது,” என்றார்.
விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், விமானம் விழுந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கவும் மக்கள் பெரிதும் உதவினர். இதற்கு துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்துப் பேசிய கொலம்பியா விமானப்படைத் தளபதி கார்லோஸ் பெர்னாண்டோ சில்வா, “விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது, அதனால் தான் அது விமான நிலையத்திற்கு அருகிலேயே விழுந்துள்ளது. மற்ற விவரங்கள் புலனாய்விற்குப் பிறகே தெரியவரும்,” என்றார்.
மேலும், இந்த விபத்தின் பின்னணியில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் தாக்குதல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று ராணுவத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் பெட்ரோ சான்செஸ், உயிரிழந்த வீரர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.



